கீதாச்சாரம்:
******************
இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை எத்தனையோ அறிவுரைகள் கொண்ட நூல். எந்த ஒரு சமய நூலும், இறுதியில் சாரமாகத்தான் மக்களை அடைகிறது. அது தரும் விரிவான விளக்கங்களையோ வியாக்யானங்களையோ முழுமையாக மக்கள் படித்து அத்தனையையுமே விளங்கிக்கொள்ள விரும்புவதில்லை என்பது ஒரு தவிர்க்க இயலாத உண்மை. அதற்கு பகவத் கீதையும் விதி விலக்கல்ல.
எனவே கீதையின் சாரத்தைப் பார்க்கலாம். கீதையில் ஒரு மனிதனின் உயிர் (ஆன்மா) ஒரு கூட்டை விட்டு இன்னொரு உடல் தேடிச் சேருமென்றும் உடல்தான் அழிவுறுவது, ஆன்மா அல்ல என்றும் கூறப்பட்டிருக்கிறது. இது இந்நாள் வரை அப்படியே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டதாக தெரியவில்லை. ஆனால் அதன் மூலம் கீதை உணர்த்த வந்த வழிமுறையை ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது.
எல்லா சமய நூல்களுமே (இது வரை அறிந்த) அறிவியலை அடிப்படையாகக் கொண்டு உன் உடலோடு சேர்ந்து, உயிரும் அழிந்து விடும் எந்த விதமான தொடர்ச்சியும் இல்லவே இல்லை என்று ஆணித்தரமாக மக்களிடம் அறிவுறுத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள் - பிறகு பெரும்பாலான மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசமே இல்லாத வாழ்க்கை முறைதான் அமையும். அதாவது "வல்லவன் வாழ்தல்". வல்லமை இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - பிறர் நலன் தேவையேயில்லை என்ற நிலைமை உருவாகி இருக்கும். மனித நேயமே மறைந்து போயிருக்கும். அதுதான் எதுவாக இருந்தாலும், இந்த ஒரே பிறவியோடு முடிந்துவிடுமே ; பிறகு நல்லது செய்தால் என்ன? அல்லது செய்தால் என்ன? அதிக நாள் உயிரோடு இருந்தால் போதும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும்.
இந்த ஆன்மா தொடரும் என்ற கருத்தின் மூலம், இப்பிறவியில் நல்லது செய், மறு பிறவியும் அந்த புண்ணியம் உன்னைத் தொடர்ந்து வந்து நலன் பயக்கும் என்று ஒரு நம்பிக்கை திணிக்கப் பட்டு குறைந்தபட்சம், அச்சத்தின் பேரிலாவது மனிதம் காக்கப் படுகிறது.
மற்றொரு முக்கிய உபதேசம் - "கடமைச் செய் பலனை எதிர்பாராதே". இது கூடுமான வரையில் தவறாகவே புரிந்து கொள்ளப் படுகிறது. இது கடமையைச் செய்பவர்களுக்கு மட்டுமே. அந்தக் கடமையால் பலன் அடைபவர்களுக்கு அல்ல. அதைப்போல கடமை என்பதன் பொருளும் மிக மிக விரிவான ஒன்றாகும். அது எல்லா செயலுக்குமே பொருந்தும். இதன் பொருள் எந்த பிரதிபலனும் எதிர் பார்க்க வேண்டவே வேண்டாம் என்பதல்ல. அப்படி இருப்பின் அந்த கீதை போதித்த கிருஷ்ணா பரமாத்மாவே குருஷேத்ர யுத்தத்துக்கு துணை பொய் இருக்க வேண்டிய அவசியமில்லை. கானக வாழ்வு முடிந்ததா? கடமை முடிந்தது துரியோதனனிடம் நாடு கேட்பதெல்லாம் வேண்டாம். பாண்டவர்கள் இருக்கின்றதை வைத்துக்கொண்டு வாழ்ந்து மடியட்டும் நெற்று விட்டிருப்பார்.
"பலனை எதிர்பாராதே" என்றால் உன்னுடைய பலனின் மீதான எதிர்பார்ப்பு உன் மற்ற கடமைகளையோ, உன் எதிர்காலத்தையோ , உன் நடைமுறை வாழ்வையோ பாதிக்காமல் இருப்பதாக என்று பொருள். இந்த முறை பதவி உயர்வுக்கு தேர்வு எழுதுகிறீர்கள், கிட்டவில்லை ; கடும் கோபத்தில், அடுத்ததை எழுதாமல் விடுகிறீர்கள், பிறகு கிடைத்ததை வேண்டாமென்று ஒதுக்குகிறீர்கள், இப்படியாக வெவ்வேறு வாய்ப்புகளை நழுவ விட்டு, வாழ்வின் தரமும் உயராது, உங்களை நீங்களே வருத்திக்கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள். யாருக்கு நட்டம்? கூட்டி கழித்துப் பாருங்கள் உண்மையான நட்டம் அதாவது பெருத்த நட்டம் முதல் தோல்வியால் உருவானதா? இல்லை அதன் விளைவான உங்களின் "எதிர்வினையால்" உருவானது. எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் இருந்தே தீரும்; அளவுக்கதிகமான ஏமாற்றம் சுய அழற்சியில் உங்களை ஆழ்த்தி மேலும் மேலும் கீழே தள்ளும். எனவே "எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள்" என்பதுதான் பொருள்.
அடுத்தது - எது உன்னுடையது இழப்பதற்கு ? எழுதுகிறேன் பிறகு........
Please excuse type errors.
No comments:
Post a Comment